மதுரவாயல் பைபாஸ் சாலையில் ஆட்டோ வீலிங் வீடியோ வைரல்: நம்பரை வைத்து நபருக்கு வலைவீச்சு
அண்ணாநகர்: மதுரவாயல் பைபாஸ் சாலையில் ஆட்டோவில் வீலிங் செய்த நபரை ஆட்டோ நம்பர் மூலம் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயல் பைபாஸ் மற்றும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரதான சாலையில் பட்டப்பகலில் அதிகமாக வாகனங்கள் சென்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும்விதமாக ஒருவர் சாலையில் ஆட்டோவை சாய்த்தபடி சாகசம் செய்துள்ளார். இதை பார்த்ததும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ வேகமாக வைரலானது.
இதையடுத்து போக்குவரத்து உதவி ஆணையர் ரவி, கோபம்பேடு போக்குவரத்துஇன்ஸ்பெக்டர் எஸ்.பி.சுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்து இணையதளத்தில் பரவிவரும் வீடியோக்களில் பதிவான ஆட்டோ நம்பரை வைத்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்டாண்ட்டில் ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சமூகநல ஆர்வலர்கள் கூறுகையில், ‘’கோயம்பேடு பகுதியில் பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக பைக் ரேஸ் தடுக்கப்பட்டுள்ளது. தற்போது மதுரவாயல் பைபாஸ், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையில் ஆட்டோவில் சாகசம் செய்துள்ளனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆட்டோவில் சாகசம் செய்யும் நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.