மதுரை தெற்கு மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை
சென்னை: மதுரை மேற்கு, சிவகாசி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அப்போது சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், “உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதுவரை 22 நாட்கள் 52 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மதுரை தெற்கு, சிவகாசி சட்டமன்ற தொகுதியின் நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து பேசினார். இதில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின் போது சட்டப்பேரவை தொகுதி நிலவரம், கட்சி வளர்ச்சி பணி, ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகளை முடுக்கி விட வேண்டும். கடந்த தேர்தலை விட வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும். 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் நேரடியாக எடுத்து செல்ல வேண்டும். திமுக ஆட்சியை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள், மேலிடம் அரசிடம் மக்கள் வேறு என்னென்ன திட்டங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை கேட்டறிய வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்தினார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னை சந்தித்த அனைத்து நிர்வாகிகளுக்கும் புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.