மதுரைக்கு போட்டிக்கு அழைத்து சென்று பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த டேக்வாண்டோ மாஸ்டர்: போலீசில் புகாரால் தற்கொலை முயற்சி
நாகர்கோவில்: குமரி மாவட்டம் பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவர் ராமன்புதூர் பகுதியில் உள்ள டேக்வாண்டோ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றதுடன், அங்கேயே பயிற்சியாளராக பணியில் சேர்ந்துள்ளார். மேலும் சில பள்ளிகளிலும் பகுதி நேர டேக்வாண்டோ பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர், டேக்வாண்டோ போட்டிகளுக்கு மாணவ, மாணவியரை வெளியூர்களுக்கு அழைத்து செல்வது வழக்கம். இதன்படி கடந்த 11 மற்றும் 12ம் தேதி மதுரையில், ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் அமைப்பு நடத்திய டேக்வாண்டோ போட்டிக்கு குமரியில் இருந்து பள்ளி மாணவிகளை பிரதீப் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, பெற்றோருடன் வந்த மாணவிகளை அனுப்பிய பிரதீப், தனியாக வந்த ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை மட்டும், மதியம் மற்றொரு மேட்ச் இருப்பதாக கூறி தனது அறையில் தங்க வைத்துள்ளார். அப்போது மாணவியை மிரட்டி அவர் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. பின்னர், மாணவியுடன் குமரி திரும்பினார். மதுரையில் இருந்து வந்த பின்னர் மாணவி, பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதனை அறிந்த பிரதீப் பயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார், சம்பவம் நடைபெற்ற இடம் மதுரை நாகமலை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால், பிரதீப் மீது வழக்கு பதிவு செய்து, அவ்வழக்கை மேல் விசாரணைக்காக மதுரை நாகமலை புதுக்கோட்டைக்கு மாற்றினர். தொடர்ந்து மேல் நடவடிக்கைகளை மதுரை போலீசார் மேற்கொள்வார்கள். மேலும், காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து தற்கொலை முயற்சி போல் நாடகத்தை பிரதீப் மேற்கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
* மாணவியிடம் பாலியல் சீண்டல் போக்சோவில் ஏட்டு கைது
நாகப்பட்டினம் அருகே ஆழியூர் பகுதியை சேர்ந்தவர் குணா (37). திட்டச்சேரி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் இவர், நாகப்பட்டினத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு அடிக்கடி செல்வார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் தனது சகோதரி வீட்டிற்கு குணா சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த பிளஸ்டூ படிக்கும் தனது சகோதரியின் மகளிடம் குணா பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக மாணவி நாகப்பட்டினம் குழந்தைகள் நல குழுமத்தில் புகார் செய்தார். அதன்பேரில் குழந்தைகள் நல குழுமம் சார்பில் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஏட்டு குணாவை நேற்று கைது செய்தனர்.
