மதுரை, கோவைக்கு ‘நோ மெட்ரோ’ எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணிப்பது அழகல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை: மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல என முதல்வர் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: ‘கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “நோ மெட்ரோ” என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ. அரசு!
அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.வை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதை சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ பணிகளை தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம். அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம்! தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.