மதுரையில் வரும் 21ம் தேதி தவெக மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
சென்னை: தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கை: மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றிநடை போட்டு வருவதை அறிவீர்கள். இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாகக் கழகத்தின் மாநில மாநாடு வரும் 25ம் தேதி மதுரையில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன். ஆனால் மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் காவல்துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது.
எனவே மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக வரும் 18ம் தேதி முதல் 22ம் வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும் படியும் காவல் துறை கேட்டுக் கொண்டது. அதன்பேரில் கழகத்தின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்படவுள்ளது. தவெக மாநில மாநாடு வரும் 21ம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் ஏற்கனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெறவுள்ளது. மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும், பாதுகாப்புடனும் வந்து கலந்துகொள்ள வேண்டும்.