மதரசா வாரியத்தை ஒழிக்கும் முடிவு சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான தாக்குதல்: ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மதரசா கல்வி வாரியத்தை ஒழித்து, சிறுபான்மையினரால் நடத்தப்படும் அனைத்து நிறுவனங்களையும் மாநில வாரியத்தின் கீழ் கொண்டுவரும் உத்தரகாண்ட் அரசின் முடிவு, அரசியலமைப்பு உத்தரவாதங்களை கடுமையாக மீறுவதாகவும், இந்தியாவின் சிறுபான்மையினரின் கல்வி மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான நேரடி தாக்குதலாகவும் உள்ளது.
மதரசாக்கள் வரலாற்று ரீதியாக மத மற்றும் தார்மீகக் கல்வியை மட்டுமல்லாமல், சமூகத்தின் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒதுக்கப்பட்ட முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்துப் பிரிவினரிடையே நவீனக் கற்றலை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. உண்மையான கல்வி முன்னேற்றத்தை உரையாடல், உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஏற்று செயல்படுவதின் மூலம் மட்டுமே அடைய முடியுமே தவிரச் சிறுபான்மை நிறுவனங்களை அகற்றும் கட்டாய நடவடிக்கைகள் மூலம் அடைய இயலாது.
உத்தரகண்ட் அரசு உடனடியாக இந்தப் பிற்போக்குத்தனமான முடிவை திரும்பப் பெறவேண்டும். சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இணைந்துசெயல்பட வேண்டும். இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது. அந்தப் பன்முகத்தன்மையை அழிக்கும் எந்தவொரு முயற்சியும் நமது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும்.