மதுராந்தகம் அருகே பிளஸ்2 படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அதிமுக பிரமுகர்: போலீசார் தேடுதல் வேட்டை
சென்னை: அச்சிறுப்பாக்கம் அருகே சித்த மருத்துவம் படித்துவிட்டு போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்து தலைமறைவான அதிமுக ஒன்றிய செயலாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே தொழுப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜன். இவர் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு சித்த மருத்துவம் படித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிமுக கட்சியில் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் கடமலைபுத்தூர் கிராமத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் ஓம் சக்தி கிளினிக், ஓம் சக்தி மெடிக்கல், ரத்தப் பரிசோதனை நிலையம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், சித்த மருத்துவம் படித்துவிட்டு ரங்கராஜன், அந்த கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறையில் மாத்திரை வழங்குதல், நோயாளிகளுக்கு ஊசி போடுவது போன்ற பல்வேறு செயலில் ஈடுபட்டு வந்தார். இவர் நோயாளிகளுக்கு டோஸ் அதிகமாக கொண்ட மருந்து, மாத்திரைகள் கொடுத்துள்ளார். இதனால் அவரிடம் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
இதனால், சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக அப்பகுதி மக்கள் சுகாதார இயக்குனர் அலுவலகத்துக்கு புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில், இணை சுகாதார இயக்குனர் மலர்விழி தலைமையில் மருத்துவக் குழுவினர் நேற்றுமுன்தினம் கிளினிக்கை ஆய்வு செய்தனர். அப்போது சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த அதிமுக ஒன்றிய செயலாளர் ரங்கராஜன் அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளார். இதற்கு முன்பதாக, அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகளிடம் மருத்துவ குழுவினர் நோயாளிகள் வைத்திருந்த மருந்து சீட்டை வாங்கி படித்து பார்த்து கொண்டிருந்தபோதே, ரங்கராஜன் திடீரென நோயாளிகளுக்கு தான் எழுதி கொடுத்த மருந்து சீட்டுகளை பறித்தும், பிடுங்கியும் கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதை தொடர்ந்து சுகாதார இயக்குனர் அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் அதிமுக ஒன்றிய செயலாளர் ரங்கராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவம் பார்த்து சம்பாதித்த பணத்தில் அதிமுக சார்பில் பல்வேறு விழாக்களையும் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிமுக ஒன்றிய செயலாளர் என்பதால் அவரிடம் அதிமுகவினர் ஏராளமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இவர் மீது துணை சுகாதார இயக்குனர் மலர்விழி அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து போலி மருத்துவராக அப்பகுதியில் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவியதை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அதிமுக ஒன்றிய செயலாளர் பதவி பெறும் முன்பே பலமுறை போலி மருத்துவம் பார்த்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டவர் ரங்கராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.