மாதவரம் ஆந்திரா பேருந்து நிலையத்தில் கஞ்சா பார்சலுடன் வாலிபர் கைது: 19 கிலோ பறிமுதல்
புழல்: சென்னை மாதவரம், 100 அடி சாலை ரவுண்டானா அருகே உள்ள ஆந்திர பேருந்து நிலையத்தில் ஒரு வாலிபர் சந்தேக நிலையில் 2 கைப்பையுடன் நின்றிருப்பதாக நேற்று மாதவரம் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு சிறப்பு எஸ்.ஐ ராஜேஷ், தலைமை காவலர்கள் ராஜசேகர், மோசஸ், சார்லஸ், தமிழ்தென்றல், ஹரி ஆகியோர் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர பேருந்திலிருந்து கீழே இறங்கி வந்த 17 வயது சிறுவன், அங்கு நின்றிருந்த வாலிபரிடம் 2 கைப்பைகளை கொடுத்துள்ளார்.
பின்னர் 2 கைப்பைகளுடன் நின்றிருந்த வாலிபர் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதில், அந்த கைப்பைகளில் 19 கிலோ எடையிலான கஞ்சா பார்சல்கள் கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இருவரையும் மாதவரம் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர் சென்னை நந்தனம், சிஐடி நகரை சேர்ந்த சந்தோஷ் (25) எனத் தெரியவந்தது.
மேலும், ஒடிசாவில் இருந்து ஆந்திரா வழியாக ஆந்திர பேருந்து மூலம் சென்னைக்கு வந்திறங்கிய 17 வயது சிறுவன், அங்கு நின்றிருந்த சந்தோஷிடம் கஞ்சா பார்சல் அடங்கிய கைப்பைகளை கொடுத்துள்ளார். இதை சந்தோஷ் பெற்ற, சென்னை மற்றும் புறநகர் பகுதி கஞ்சா வியாபாரிகளிடம் கொடுத்து, அவற்றை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சில்லறை விற்பனை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்ற விவரங்கள் தெரியவந்தன. இதுகுறித்து மாதவரம் மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் நேற்று மாலை இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 17 வயது சிறுவனை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், சந்தோஷை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.