ரூ.21 கோடியே 29 லட்சம் தருமாறு உத்தரவிடப்பட்டதை அமல்படுத்தக்கோரி லைகா நிறுவனம் வழக்கு: நடிகர் விஷால் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு அந்த பணத்தை செலுத்தியது. இதையடுத்து, அந்த தொகை முழுவதும் தங்களுக்கு திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி பணத்தை திருப்பித் தருமாறு உத்தரவிடக் கோரி விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்குமாறு விஷாலுக்கு உத்தரவிட்டது.
இதைஅமல்படுத்தக்கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமா ஸ்ரீனிவாசன், நடிகர் விஷால் தற்போது மகுடம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்திற்காக பெறப்படும் தொகையை டெபாசிட் செய்ய வேண்டுமென்று கோரினார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு குறித்து விஷால் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.