28 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு; சக நடிகருடன் ஜாலியாக இருந்த நடிகை: ஹாலிவுட்டில் பரபரப்பு
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகை லோரி லாக்லின் தனது கணவரை பிரிந்த நிலையில், சக நடிகருடன் நெருக்கமாக காணப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகை லோரி லாக்லின், கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவின் கல்லூரி மாணவர் சேர்க்கை மோசடி வழக்கில் சிக்கி, தனது ஆடை வடிவமைப்பாளர் கணவரான மாசிமோ கியானுல்லியுடன் சிறை தண்டனை பெற்றவர் ஆவார். இந்த சம்பவத்திற்குப் பிறகு தம்பதியரின் திருமண வாழ்வில் பெரும் மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 1997ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இசபெல்லா ரோஸ், ஒலிவியா ஜேட் என இரு மகள்கள் உள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இருவரும் தங்களது பிரம்மாண்ட மாளிகையை விற்பனைக்கு பட்டியலிட்டது அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டதற்கான அறிகுறியாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், 28 வருடங்கள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் தற்போது பிரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினை குறித்து லோரி லாக்லினின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘லோரியும் அவரது கணவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். தங்களது திருமண வாழ்வில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்துள்ளனர்’ என்றும், ‘தற்போது சட்டரீதியான நடவடிக்கைகள் எதுவும் இல்லை’ என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, நேற்று நடிகை லோரி சக நடிகரான ஜேம்ஸ் டப்பருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு விருந்தில் பங்கேற்றது தெரியவந்துள்ளது. உணவருந்திய பிறகு இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோரியும், ஜேம்ஸ் டப்பரும் ஏற்கனவே சில திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.