லண்டன் கீழைத்தேயவியல், ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழக இந்திய வம்சாவளி மாணவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்: நெருக்கமான உரையாடல் என எக்ஸ் தளத்தில் பதிவு
சென்னை: லண்டன் கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழக இந்திய வம்சாவளி மாணவர்களுடன் கலந்துரையாடல் மனதுக்கு நெருக்கமான உரையாடல் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். லண்டன் கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழக இந்திய வம்சாவளி மாணவர்களுடன் கலந்துரையாடியது குறித்தும், அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தியது குறித்தும், PACT கண்காட்சியைப் பார்வையிட்டது குறித்தும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: லண்டன் கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழக இந்திய வம்சாவளி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுடன் திராவிட மாடல் ஆட்சி,
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் ஆற்றல் ஆகியவை குறித்த எனது கருத்துகளைப் பகிர்ந்து, மனதுக்கு நெருக்கமான உரையாடலை மேற்கொண்டேன். பின்னர், அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தி, எக்காலத்துக்குமான தமிழ்ப் பண்பாட்டின் அறிவுக்கருவூலமாகத் திகழும் திருக்குறளைப் போற்றினேன். இறுதியாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகளையொட்டி, அதன் மக்களாட்சி மரபினையும் தற்காலப் பொருத்தப்பாடினையும் குறித்து நடைபெறும் PACT கண்காட்சியைப் பார்வையிட்டேன். இவ்வாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.