பண்டிகை கால கடன் விகிதம் 27% அதிகரிப்பு: பஜாஜ் நிதி நிறுவனத்தில் முதல் முறையாக கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை 52 சதவீதமாக உயர்வு
சென்னை/புனே:- பண்டிகை காலங்களில் மக்கள் தாங்கள் விரும்பிய பொருட்களை வாங்குவதற்காக வங்கிகள் மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களில் கடன் உதவி பெறுகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி சாரா கடன் வழங்கும் நிதி நிறுவனமான பஜாஜ் பின்சர்வின் ஒரு அங்கமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில், இந்த ஆண்டு பண்டிகை கால கடன் வழங்கும் விகிதமானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும், மொத்த கடன் வழங்கும் விகிதம் 29 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மற்றும் நுகர்வோரின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் நோக்கில் தனிநபர் வருமான வரியில் ஏற்பட்ட மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாக உள்ளன என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது.பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 26 வரை சுமார் 63 லட்சம் கடன்களை வழங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில், 23 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கடன்களை வாங்கி உள்ளனர். மொத்த கடன் பெற்றவர்களின் எண்ணிக்கையில் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 52 சதவீதமாகும்.
இது குறித்து பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் பஜாஜ் கூறுகையில், மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மற்றும் தனிநபர் வருமான வரி மாற்றங்கள் இந்தியாவின் நுகர்வு சார்ந்த வளர்ச்சியில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. அன்றாட பயன்பாட்டுக்கான பொருட்களின் விலை குறைவு காரணமாக, லட்சக்கணக்கான குடும்பங்கள் பண்டிகை காலங்களில் தாங்கள் விரும்பிய பொருட்களை வாங்க கடன் வசதியை பெற்றுள்ளனர். அவர்கள் இந்த தொகையை தங்களின் சிறந்த வாழ்க்கை முறை மாற்றத்திற்காக உயர்தர தயாரிப்புகளை வாங்குவதற்காக பயன்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு எங்களின் கடன் வழங்கும் விகிதமானது 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த பண்டிகை காலத்தில் எங்கள் நிறுவனத்தில் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை பாதிக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கடன் பெற்றவர்கள் ஆவார்கள். எங்களின் டிஜிட்டல் தளங்கள் மற்றும் இந்தியா முழுவதும் 4,200 இடங்களில் உள்ள எங்களின் 2 லட்சத்து 39 ஆயிரம் கடன் வினியோக மையங்கள் ஆகியவற்றின் மூலம் இந்த கடன் தொகையை நாங்கள் வழங்கி உள்ளோம் என்று தெரிவித்தார்.
டிவி மற்றும் ஏர் கண்டிஷனர்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைவு காரணமாக, அதை வாங்குவதில மக்கள் ஆர்வம் காட்டிய அதே நேரம் உயர்நிலை தயாரிப்புகளையும் அதிக அளவில் வாங்கி உள்ளனர். 40 இன்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட டிவிக்களை வாங்குவதற்காக அளிக்கப்பட்ட கடன்தொகையைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் 67 சதவீதமாக இருந்தது இந்த ஆண்டு 4 சதவீதம் அதிகரித்து 71 சதவீதமாக உள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் எளிமையான முறையில் கடன் பெற பல்வேறு வசதிகளை பஜாஜ் பைனான்ஸ் அறிமுகம் செய்திருப்பதோடு, மேலும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அனுபவங்களை வழங்கும் நோக்கில் புதிய கண்டுபிடிப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மொபைல் போன்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பர்னிச்சர்கள், சோலார் பேனல்கள் உள்ளிட்ட பல்வேறு நுகர்வு சார்ந்த பொருட்களுக்கு இந்நிறுவனம் கடன் அளித்து வருகிறது.
மேலும் இந்நிறுவனம் தனது டிஜிட்டல் தளங்கள் மற்றும் நேரடி வினியோக மையங்கள் மூலம் 11 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. மேம்பட்ட வெளிப்படைத்தன்மைக்காக, இது 19 மொழிகளில் கடன் ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு முக்கிய உண்மை அறிக்கைகளை வழங்குகிறது. கடந்த ஜூன் 30-ந்தேதி நிலவரப்படி பஜாஜ் பின்சர்வ் செயலியை பதிவிறக்கம் செய்துள்ள 7.5 கோடி வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற அனுபவங்களையும் கடன், வைப்புத்தொகை, காப்பீடு மற்றும் முதலீடுகளுக்கான விரைவான அணுகலையும் வழங்கி உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்த அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தமான, 'ஜிஎஸ்டி பச்சத் உத்சவ்' மூலம் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலன் அடைந்துள்ளனர். இது மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், தொழில்முனைவோர், வர்த்தகர்கள் மற்றும் எம்எஸ்எம்இக்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கவும் வரி கட்டமைப்புகளை எளிமைப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஒரு மைல்கல் நடவடிக்கையாகும். கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்த சீர்திருத்தங்கள் மிகப்பெரிய ஒன்றாகக் கருதப்படுகின்றன. மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதம் 2025-ம் ஆண்டில் வருமான வரி குறைப்புகளுடன் இணைந்து இந்திய மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.