ரசிகனாக இருப்போம்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி முடிந்து 3 நாட்களை கடந்தும் வீரர்கள் கை குலுக்காத சர்ச்சை தீரவில்லை. பொதுவாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டிகள், இருநாடுகளும் எதிரெதிரே ஆடத் துவங்கிய காலத்தில் இருந்தே அனல் பறக்கும். சார்ஜா கோப்பை பைனலில் சேத்தன் சர்மா வீசிய கடைசி பந்தில் மியான்தத் அடித்த சிக்சர், தனது பந்தை பவுண்டரிக்கு விளாசிய ஆமிர் சோகைலை அடுத்த பந்திலேயே வெங்கடேஷ் பிரசாத் க்ளீன் போல்டு செய்தது, மணிக்கு 160 கிமீ தாண்டி வீசும் சோயப் அக்தர் பந்தை, அசால்டாக சிக்சருக்கு விளாசிய சேவக் - இப்படி பல தருணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
கடந்த 1989ம் ஆண்டு ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றபோது, மைதானத்தில் அந்நாட்டு ரசிகர்கள் பாட்டில் வீசியது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன. இதற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முழுமையாக புறக்கணித்தது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியாவிற்கு வந்தது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 12 ரன்களில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று, பாகிஸ்தான் அணியை பாராட்டியது பெரிய அளவில் பேசப்பட்டது.
நீண்ட இடைவெளிக்குபிறகு தற்போது ஆசிய கோப்பை டி20 தொடரில் இரு அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன. கடந்த 14ம் தேதி நடந்த போட்டிதான் உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களையும், ஒரு குலுக்கு குலுக்கிப் போட்டுள்ளது. பொதுவாக, கிரிக்கெட்டில் டாஸ் போடும்போது இரு அணி கேப்டன்களும், கை குலுக்கிக் கொள்வது வழக்கம். ஆனால், அன்றைய போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹாவுடன் கை குலுக்கவில்லை.
போட்டி முடிந்ததும் வீரர்கள் கை குலுக்கும் சம்பிரதாயமும் கடைப்பிடிக்கப்படவில்லை. ‘இது விளையாட்டை உணர்வை மீறிய செயல். இந்திய அணி கிரிக்கெட்டில் அரசியலை நுழைக்கிறது. போட்டியின் துவக்கத்திலேயே போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட், இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்ள வேண்டாமென கூறினார். அவரை இத்தொடரிலிருந்து நீக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆசிய தொடரில் இருந்து விலகுவோம்’ என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஷின் நக்வி தெரிவித்தார்.
மேலும், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்த வெற்றியை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்திருந்தார். இந்திய அணி விளையாட்டு உணர்வுடன் நடந்து கொள்ளவில்லை; கிரிக்கெட்டை விட தேசபக்தி முக்கியமானது என்கிற ரீதியிலான விமர்சனங்கள் ரசிகர்களால் வலைத்தளங்களில் சூடு பறக்க நடந்து கொண்டிருக்கின்றன. தொடரை விட்டு வெளியேறினால் ரூ.140 கோடி கட்ட வேண்டும். ஐசிசியின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதால் பாகிஸ்தான் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளது.
இந்த தொடரில் இந்திய - பாகிஸ்தான் மீண்டும் விளையாட வாய்ப்புள்ளது. இதனை ஒரு விளையாட்டுப் போட்டியாகவே கருதி இயல்பாகவே இரு அணிகளும் விளையாட வேண்டும். பழைய போட்டிகள் போன்று பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கட்டும். அதேநேரம் பகைமை உணர்வு வேண்டாமென்பது பொதுவான கிரிக்கெட் ரசிகர்களின் கருத்தாகும். மற்றபடி ஆசிய கோப்பை டி20 பைனலில் இரு அணிகளும் மோதினால் நல்லா இருக்கும்ல என்கிற சாதாரண ரசிகனாகவே போட்டியை பார்த்து விட்டு செல்வோமே...
