லால்குடியில் பரபரப்பு இளம்பெண் சாவில் சந்தேகம்: உறவினர்கள் திடீர் சாலை மறியல்
லால்குடி : லால்குடியில் இளம்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கீழமணக்கால் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன்(30). கூலித்தொழிலாளி. இவருக்கும் எலமனூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி மகள் ஸ்வேதா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தரனேஷ்வரன்(2), மகிழ் மித்திரன்(1) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
கணவன் மனைவிக்கிடையே தொடர்ந்து தகராறு நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதனால் ஸ்வேதாவின் தாயார் கிருஷ்ணவேணி கடந்த சில வாரங்களுக்கு முன் மருமகன் வீட்டிற்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தி பேசி விட்டு சென்றார்.
இந்நிலையில் கடந்த வாரம் தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுவேதா தூக்கில் சடலமாக தொங்கினார். வெளியே சென்றுவந்த புவனேஸ்வரன் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே கூச்சலிட்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர்.இதையடுத்து புவனேஸ்வரன் லால்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்வேதா உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தனது மகள் ஸ்வேதா சாவில் மர்மம் உள்ளது, எனவே சுவேதா கணவரை கைது செய்ய வேண்டும் என சுவேதாவின் தாயார் கிருஷ்ணவேணி மற்றும் அவரது உறவினர்கள் லால்குடி ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். லால்குடி இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் லால்குடி ஆர்டிஓ தர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் இரண்டு மணிரநேரம் பரபரப்புடன் காணப்பட்டது.