லடாக்கில் பாஜக அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம்..!!
லடாக்: லடாக்கில் பாஜக அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் ஒன்றாக இருந்தது. 2019ம் ஆண்டு இவை இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு யுனியன் பிரதேசங்களாக மாறியது. அப்போது முதலே லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இந்த நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும், அதற்கு 6வது அட்டவணை பட்டியலில் சேர்த்து பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என கூறியும். சோனம் பாங் என்ற சமூக ஆர்வலர் தலைமையில் கடந்த 14 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். இன்றைய நாளோடு அவரது உண்ணாவிரத போராட்டம் 15வது நாளை எட்டியுள்ளது.
இன்றைய தினமும் போராட்ட காரர்கள் மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்திய நிலையில் திடீரென போராட்ட காரர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே மோதல் நடைபெற்றது. காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்ததாகவும், தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் கூறுகையில், இளைஞர்கள் சிலர் அங்குள்ள கட்டிடங்கள் உள்ளிட்ட பாஜக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது கற்களை வீச தொடங்கியதாகவும் அவர்களை கலைப்பதற்காகவே தடியடி நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் வலுத்து வன்முறையாக மாறி அங்குள்ள பல அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
போராட்டக்காரர்கள் காவல்துறையின் வாகனங்கள் உட்பட பல வாகனங்களுக்கு தீ வைத்தனர். அதன் தொடர்ச்சியாக லே வில் உள்ள பாஜக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களும் தீக்கிரையாக்கப்பட்டது. பாஜக தேர்தல் வாக்குறுதியில் லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் வாக்குறுதி நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாக அங்குள்ள போராட்ட காரர்களும், இளைஞர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். 80, 90 ஆண்டுகளில் போராட்டம் நடைபெறாத நிலையில் இன்றைய தினம் மிக பெரிய போராட்டம் நடத்தப்பட்டு அது வன்முறையாக மாறியது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.