குன்றத்தூர் அருகே சாலையோரம் பழுதாகி நின்ற டிராக்டர் மீது அரசு பஸ் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது: அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்
குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே சாலையோரம் பழுதாகி நின்ற டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். தாம்பரத்தில் இருந்து ஆவடி நோக்கி இன்று காலை 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டது. பேருந்தை தணிகைவேலன் என்பவர் ஓட்டி சென்றார். குன்றத்தூர் அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் வந்தபோது, சாலையோரம் பழுதாகி நின்ற தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர் மீது அரசு பேருந்து மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மழைநீர் கால்வாய் மீது ஏறி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்தின் முன்பகுதி சேதமானது. அரசுப் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறிகொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். விபத்தில் அதிர்ஷ்ட வசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்துப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராட்சத கிரேன் மூலம் கவிழ்ந்து கிடந்த அரசு பேருந்தை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விதிமுறைகளை மீறி சர்வீஸ் சாலைகளில் கண்டபடி வாகனங்களை நிறுத்துவதால் விபத்து நடக்கிறது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.