5 நாட்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
தேனி: நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் இன்று அனுமதி அளித்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலை, வெள்ளகெவி, வட்டக்கானல் பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த அருவிக்கு நீர்வரத்து இருக்கும். இயற்கை எழில்மிகுந்த சூழலில் அமைந்துள்ள இந்த அருவிக்கு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சனி, ஞாயிறு வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
டிட்வா புயல் காரணமாக கொடைக்கானல் பகுதியில் பெய்த மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 3ம் தேதி பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். நீர்வரத்து சீரான பிறகு பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். கடந்த 5 நாட்களாக நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அருவிப் பகுதிக்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பில் மழை இல்லாததால் அருவியில் நீர்வரத்து குறைந்து சீரானது. இதனால் இன்று காலை அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.