தொடர்ந்து மழை பெய்வதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை வீழ்ச்சி
அண்ணாநகர்: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது. தற்போது மழை பெய்துவருவதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்குவதற்கு வியாபாரிகளும் பொதுமக்களும் குறைந்தளவே வந்திருந்தனர். இதன்காரணமாக வியாபாரம் இல்லாமல் காய்கறிகள் விலை குறைந்தது.
இதன்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 18 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் 25க்கும் விற்பனை செய்து வருகின்றனர். தக்காளி 20க்கும் உருளைகிழங்கு 17க்கும் கேரட் 30க்கும் பீன்ஸ் 25க்கும் பீட்ரூட் முள்ளங்கி ஆகியவை 15க்கும் விற்பனையானது. சவ்சவ், வெண்டைக்காய், புடலங்காய், சுரக்காய் 10க்கும் முட்டைகோஸ் 5க்கும் கத்திரிக்காய் 15க்கும் காராமணி, பாவற்காய் மற்றும் காலிபிளவர் 20க்கும் சேனைக்கிழங்கு 40க்கும் முருங்கைக்காய் 30க்கும் நூக்கல், கொத்தவரங்காய் 25க்கும் கோவைக்காய் 12 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.