தென்னிந்தியாவிலேயே நீளமான கோவை - அவிநாசி சாலை மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கோவை: கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தூரத்துக்கு கட்டப்பட்ட அவிநாசி சாலை புதிய உயர்மட்ட மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவை அவிநாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், ரூ.1,791.23 கோடி மதிப்பில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்டப் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திட்டப்பணி தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் முடிக்கப்பட்டு, இந்த மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
ஜி.டி.நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் 304 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 10 வழித்தடங்களுடன், தென்னிந்தியாவிலேயே மிக நீளமான உயர் மட்ட பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது அதிர்வு மற்றும் சத்தம் கேட்பதை தவிர்க்க, புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மூலம் கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் நேரம் 45 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக குறையும். கோவை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் இந்தியாவில் 3வது நீளமான தரைவழிப்பாலம் ஆகும். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில், இந்த மேம்பாலம் திறக்கப்-பட்டதால், நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். கோவைக்கு வந்து, செல்லும் வெளியூர் மக்கள் நிம்மதி அடைவார்கள்.