கொல்லம் அருகே கொடூரம்; கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் பாட்டி கழுத்து அறுத்து கொலை: வாலிபர் கைது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் பாட்டியை கழுத்து அறுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவரா அருகே வட்டத்தரை பகுதியை சேர்ந்தவர் சுலேகா பீவி (68). அவரது மகள் வழி பேரன் ஷஹனாஸ் (30). போதைப் பொருளுக்கு அடிமையானவர் ஆவார். ஒழுங்காக வேலைக்கு செல்ல மாட்டாராம். தாய் மற்றும் பாட்டியை மிரட்டி போதைப் பொருளுக்காக பணம் வாங்குவது வழக்கம். நேற்று இரவு வழக்கம் போல பாட்டி சுலேகா பீவியிடம் கஞ்சா வாங்குவதற்கு பணம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் கொடுக்க மறுத்து இருக்கிறார். தொடர்ந்து ஷஹனாஸ், பாட்டியை கழுத்தை அறுத்துக் கொலை செய்து உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்தார். இந்த சமயத்தில் ஷஹனாசின் தாய் வெளியே சென்று இருந்தார். அவர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது கட்டிலுக்கு அருகே ரத்தக்கறை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அதைத்தொடர்ந்து கட்டிலுக்கு அடியில் பார்த்தபோது தாய் சுலேகா பீவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சுலேகா பீவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஷஹனாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.