சீசன் களை கட்டியது; கோடியக்கரையில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
வேதாரண்யம்: வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பறவைகள் குவிந்துள்ளதால் கோடியக்கரையில் இந்தாண்டு சீசன் களை கட்டி உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நூழைவு வாயில் என்று அழைக்கப்படும் இந்த சரணாலயத்தில் ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் மார்ச் வரை சீசன் காலமாகும்.தற்போது சீசன் துவங்கி உள்ளதால் ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரில் இருந்து தப்பிக்க கோடியக்கரைக்கு 250க்கும் மேற்பட்ட வகை பறவைகள் வந்து குவிந்துள்ளன. செங்கால் நாரை, கூழைக்கிடா, பூநாரை, கடல் காகம், கடல் ஆலா, வரி தலை வாத்து, கூனி அரிச்சான் உள்ளிட்ட பறவைகள் பல ஆயிரக்கணக்கில் வந்துள்ளது.
குறிப்பாக கூனி அரிச்சான் ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து சுமார் 10,000 மைல்கள் கடந்து வந்துள்ளது. அதேபோல், கொசு உள்ளான், பட்டாணி, உப்புக்கொத்தி மூக்கு உள்ளான், சீட்டி உள்ளான், குறு மூக்கு உள்ளான், பெரிய அரிவாள் மூக்கு உள்ளான், மஞ்சள் கால் சட்டித்தலை உள்ளான், சாம்பல் உப்புக்கொத்தி, கருவால் மூக்கன், பட்டைவால் மூக்கன், பச்சைக்கால் உள்ளான், பச்சைக்கால் உருண்டை உள்ளான், கருப்புக்கால் உருண்டை உள்ளான், ஊசிவால் வாத்து, தட்டை அலகு வாத்து உள்ளிட்ட பறவைகளும் குவிந்துள்ளன.
இரட்டை தீவு, கோவை தீவு, நெடுந்தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் ரம்மியமான சூழலில் பறவைகள் சிறகு அடித்து பறப்பதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். கோடியக்கரையில் தட்பவெப்ப சூழல் பறவைகளுக்கு ஏற்ற வகையில் தற்போது நிலவுவதால், இந்த ஆண்டு லட்சக்கணக்கில் பறவைகள் வர வாய்ப்புள்ளது என்று மும்பை பறவை ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.