கொடநாடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதியில், ஜெயலலிதா, சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொலை, கொள்ளை நடந்தது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரள மாநிலத்தை சேர்ந்த 10 பேரை ேகாத்தகிரி போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த ஜித்தின் ஜாய் நேரில் ஆஜரானார்.
அரசு தரப்பு வழக்கறிஞர்களான ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசாரும் ஆஜராகினர். அப்போது அரசு தரப்பில் இவ்வழக்கில் கூடுதல் சாட்சி விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் கால அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.