கொடைக்கானல் மலைச்சாலையில் அந்தரத்தில் தொங்கிய கார் ஆறு பேர் உயிர் தப்பினர்
கொடைக்கானல்: கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் இருந்து பெண்கள் உள்பட 6 பேர் சுற்றுலாவுக்காக நேற்று முன்தினம் இரவு காரில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் புறப்பட்டனர். நேற்று அதிகாலை வத்தலக்குண்டு - கொடைக்கானல் மலைச்சாலையில் பெருமாள்மலை அருகே வந்தபோது, இவர்களது கார் மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றது.
அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த தனியார் விடுதி வளாக சிறிய தடுப்புச்சுவர் மற்றும் விளம்பர பலகை மீது மோதி மலைச்சாலையில் அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால் காருக்குள் இருந்தவர்கள் அலறினர்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியினர் காரில் இருந்த 6 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு சுவரை கார் தாண்டியிருந்தால் பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அந்தரத்தில் தொங்கி நின்றதால் 6 பேரும் உயிர் தப்பினர்.