கத்தியை காட்டி மிரட்டி மாணவியுடன் வாலிபர்கள் சுவர் ஏறிக்குதித்து கல்லூரி மோட்டார் அறையில் பலாத்காரம் செய்தது அம்பலம்: கோவையில் நடந்த கொடூரம் பற்றி புதிய தகவல்
கோவை: கோவையில் நடந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியை 3 வாலிபர்களும் கத்தி முனையில் கடத்தி சென்று சுவர் ஏறிக்குதித்து பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள மோட்டார் அறையில் வைத்து பலாத்காரம் செய்தது அம்பலமாகி உள்ளது. கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த 2ம் தேதி இரவு மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, காரில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்தபோது கத்திமுனையில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சகோதரர்களான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்கிற கருப்பசாமி (30), காளி என்கிற காளீஸ்வரன் (21), இவர்களது உறவினரான மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகியோரை கடந்த 3ம் தேதி இரவு போலீசார் சுட்டுப்பிடித்தனர். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது: கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோர் கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரில் மது குடித்து கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது அவர்களை கடந்து சென்று நின்ற காரை 3 பேரும் சென்று பார்த்தனர். அப்போது காரில் கல்லூரி மாணவி, தனது காதலனுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்த அவர்கள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டனர். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து காதலனை கத்தியால் வெட்டி தாக்கினர். பின்னர் மாணவியை கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து இழுத்து சென்றுள்ளனர். கத்திமுனையில் மிரட்டியபடி இழுத்துச் சென்றதால் மாணவி பயந்து போய் சத்தம் போடாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து 3 பேரும் மாணவியை 500 மீட்டர் தொலைவில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மதில் சுவர் அருகே அழைத்து வந்தனர். அங்கு 5 அடி உயரத்தில் இருந்த சுவரை ஏறி குதித்துள்ளனர். மாணவியையும் சுவரை தாண்டி வரச்செய்து தூக்கி சென்றுள்ளனர். உள்ளே நுழைந்த அவர்கள் கல்லூரி வளாகத்தில் கழிவு நீர் தொட்டி அருகே இருந்த மோட்டார் அறையில் கத்தி முனையில் 3 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த நேரத்தில் வெளியே போலீசார் சைரன் சத்தத்துடன் மாணவியை தேடி சுற்றிக்கொண்டு இருந்தனர்.
அந்த சத்தத்தை கேட்டும், போலீசார் உள்ளே வர மாட்டார்கள் என தைரியமாக இருந்துள்ளனர். போலீசாரும் மாணவியை கண்டுபிடித்து விட வேண்டும் என பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடிக்கொண்டு இருந்தனர். தொடர்ந்து அதிகாலை நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு 3 பேரும் மீண்டும் கல்லூரி மதில் சுவரை ஏறி குதித்து தப்பிச்சென்றுள்ளனர். அதன் பின்னரே மாணவி தட்டுத்தடுமாறி எழுந்து மதில் சுவரை ஏறி குதித்து அங்குள்ள குடியிருப்புவாசிகளிடம் உதவிகேட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் தான் மீட்கப்பட்டார். இவ்வாறு ேபாலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
* 500 சிசிவிடியில் 250க்கும் மேல் ‘டம்மி’
பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தை சுற்றி 40 கேமராக்கள் உள்ளது. அதில் 7 கேமராக்கள் மட்டுமே செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது போன்று பல்வேறு இடங்களில் அதிகளவில் கேமராக்கள் இருந்தும் ஒரு சில கேமராக்கள் மட்டுமே செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. போலீசார் இந்த வழக்கிற்காக 500க்கும் மேற்பட்ட கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் 50 சதவீதம் கேமராக்கள் வேலை செய்யாமல் இருந்துள்ளது.