சொகுசு கார் பறிமுதல் செய்ததை எதிர்த்து நடிகர் துல்கர் சல்மான் கேரள ஐகோர்ட்டில் வழக்கு
திருவனந்தபுரம்: சொகுசு கார் பறிமுதல் செய்ததை எதிர்த்து நடிகர் துல்கர் சல்மான் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். பூடான் ராணுவம் ஏலத்தில் விட்ட கார்களை வாங்கியது தொடர்பான விவகாரத்தில் பிரபல மலையாள நடிகர்கள் மம்மூட்டி, பிரித்விராஜ், துல்கர் சல்மான், அமித் சக்காலைக்கல் ஆகியோரின் வீடுகள் உள்பட கேரளாவில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் துல்கர் சல்மானின் வீட்டிலிருந்து கடந்த 2012ம் ஆண்டு சென்னையில் பதிவு செய்யப்பட்ட TN 01 AS 0155 என்ற பதிவு எண் கொண்ட லேண்ட்ரோவர் கார் உட்பட 2 கார்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் சுங்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் நடிகர் துல்கர் சல்மான் மனு தாக்கல் செய்துள்ளா். அந்த மனுவில் "சுங்க வரி செலுத்திய ஆவணங்களை தந்தும் அதிகாரிகள் கார்களை பறிமுதல் செய்தனர். சுங்கத்துறையினரிடம் அனைத்து ஆவணங்களையும் தந்து விளக்கமும் அளித்தேன். ஆவணங்கள் தந்தும் சுங்கத்துறையினர் தனது சொகுசு காரை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார். 2004 மாடல் லேண்ட் லோவர் சொகுசு வாங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆவணங்களை மனுவுடன் இணைத்துள்ளார். துல்கர் சல்மான் மனு தொடர்பாக, விளக்கம் அளிக்க சுங்சுத்துறைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வருகிற 30ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.