கேரளா, ராஜஸ்தானைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசத்திலும் S.I.R பணிச்சுமை காரணமாக BLO அதிகாரி தற்கொலை!!
சென்னை : கேரளா, ராஜஸ்தானைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசத்திலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு அலுவலர் தற்கொலை செய்து கொண்டார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் SIR பணிகள் வெறும் ஒரு மாதத்திலேயே நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) அதிகாரிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக கடந்த நவ.16-ம் தேதி கேரளாவில் உள்ள அனீஷ் ஜார்ஜ் (41) என்ற BLO அதிகாரி ஒருவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தை தொடர்ந்து கேரளாவில் போராட்டம் நடைபெற்ற நிலையில், ராஜஸ்தானிலும் அரசு அலுவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் அமைந்துள்ள நரி கா பாஸ் என்ற பகுதியை சேர்ந்த முகேஷ் ஜாங்கிட் (45) என்பவர் அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் BLO அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், நாளொன்றுக்கு அதிக நேரம் வேலை செய்ததாக கூறப்படுகிறது.மேலும் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் விண்ணப்பங்களை வழங்காவிட்டால், பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மேலதிகாரிகள் மிரட்டல் விடுத்ததாகவும், அதோடு தினமும் 100 வீடுகளுக்கு சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக நேற்று (நவ.17) பிந்தயாகா என்ற பகுதியில் உள்ள இரயில்வே கிராசிங்கில் இரயில் வந்து கொண்டிருந்தபோது, BLO அதிகாரி முகேஷ் ஜாங்கிட் இரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் S.I.R பணிச்சுமை காரணமாக மத்தியப்பிரதேசத்திலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு அலுவலர் தற்கொலை செய்து கொண்டார். BLO அலுவலராகப் பணியாற்றிய உதயபான் சிகாரே என்கிற பள்ளி ஆசிரியர், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.