கேரளாவில் மழை தொடர்கிறது: 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் முதல் எர்ணாகுளம் வரை உள்ள மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது மழை பெய்கிறது. அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடல் கொந்தளிப்பு காணப்படும் என்பதால் கேரளா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.