கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் ஒருவர் பலி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா என்னும் அமீபிக் மூளை காய்ச்சல் என்ற அரியவகை தொற்றால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோழிக்கோடு மருத்துவமனையில் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த 44 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் அமீபா தொற்றால் 11 பேர் அறிகுறிகளுடன் சிகிச்சையில் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே கேரளாவில் அமீபா மூளை காச்சலுக்கு 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மூளையை உண்ணும் அமீபா, அறிவியல் ரீதியாக ‘Naegleria fowleri’ என அழைக்கப்படுகிறது. இது முதன்முதலில் 1960களில் ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டது. இது ஒற்றை செல் உயிரினம் ஆகும். சூடான நன்னீர் நிலைகளில், குறிப்பாக ஏரிகள், ஆறுகள், குளங்கள் மற்றும் மோசமாகப் பராமரிக்கப்படும் நீச்சல் குளங்களில் வாழ்கிறது.கேரளாவில் ஆண்டுக்கு ஆண்டு இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 18 பேருக்கு மூளையை தின்னும் அமீபா பாதிப்பு கடந்த சில நாட்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் கேரளாவில் இதுவரை 41 பேருக்கு அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த தொற்று பெரும்பாலும் குழந்தைகளையும் இளைஞர்களையும் பாதிக்கிறது.