கெங்கவல்லி அருகே அரசு பஸ்சை சிறை பிடித்து மாணவர்கள் சாலை மறியல்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, பஸ் இயக்க நேரத்தை மாற்றக்கோரி, அரசு பஸ்சை பள்ளி மாணவர்கள் சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 370க்கும் மேற்பட்ட மாணவி, மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். பள்ளிக்கு நல்ல மாத்தி, நினங்கரை, 95 பேளூர், நரிப்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தினந்தோறும் அரசு பஸ்சில் வருகின்றனர்.
ஆத்தூரில் இருந்து காலை 5.30 மணிக்கு பஸ் புறப்படுவதால், மாணவர்கள் விரைவாக பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், மாணவர்கள் காலையில் சாப்பிட கூட முடியாமல், அதிகாலை 5 மணிக்கே எழுந்து பள்ளிக்கு தயாராகி கிளம்பும் சூழல் நிலவி வருகிறது. அதேபோல மாலையில் 5 மணிக்கு, நல்லமாத்தி பகுதியில் இருந்து பேருந்து இயக்கப்படுவதால், பள்ளியில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள், சிறப்பு வகுப்புகள் முடிந்து 5.30 மணிக்கு மேல் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி மாணவர்கள், பல முறை போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில், இன்று காலை பள்ளிக்கு அருகில் அரசு பஸ்ஸை மாணவர்கள் திடீரென்று சிறைபிடித்து மறியல் போராட்டம் நடத்தினர். இதுபற்றி மாணவர்கள் கூறுகையில், ‘ காலையில் சாப்பிட கூட முடியாமல், பள்ளிக்கு முன்கூட்டியே புறப்பட வேண்டிய நிலை உள்ளது.
அதே போல மாலை சிறப்பு வகுப்பு மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். பஸ் இயக்கப்படும் நேர பிரச்னையே இதற்கு காரணமாகும். மாணவர்கள், காலை 9 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் பஸ்சில் செல்வதற்கு ஏற்ப இயக்க நேரம் மாற்றம் செய்யப்பட்டால் வசதியாக இருக்கும்’ என்றனர்.
இதுபற்றி அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கூடமலை கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். மேலும், ஆத்தூர் அரசு போக்குவரத்துக் கழக மேலாளரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கெங்கவல்லி-தம்மம்பட்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.