கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென கீழடி அருங்காட்சியகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்!
* திறந்து வைத்த 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது கீழடி அருங்காட்சியகம்.
* வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டு வியப்பதை இன்று திடீர் ஆய்வுக்காக அங்கு சென்றபோது அறிந்துகொண்டேன்.
* கீழடி திறந்தவெளி அருங்காட்சியகமும் வரும் ஜனவரியில் திறக்கப்பட இருக்கிறது.
* பொருநை அருங்காட்சியகம் வரும் டிசம்பரிலேயே மக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது.
* கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றுமொரு அருங்காட்சியகம் எழுந்து வருகிறது.
* பூம்புகார் ஆழ்கடல் ஆய்வுகள் தொடங்கிவிட்டன. நிலத்திலும், நீரிலும், இலக்கியத்திலும் ஆய்ந்து, இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் நிலத்தில் இருந்து தொடங்கித்தான் எழுதப்பட வேண்டும் என்பதை உறுதி செய்து வருகிறது நமது திராவிட மாடல் அரசு! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.