கஜகஸ்தானில் இருந்து ஜெய்ப்பூருக்கு ஏர் ஆம்புலன்சில் வந்த 22 வயது மருத்துவ மாணவர்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் ராகுல்கோசாலியா(22). இவர் கஜகஸ்தானில் உள்ள அஸ்தானாவில் மருத்துவம் பயின்று வந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ராகுல் கோசாலியா கடந்த 8ம் தேதி அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு போராடி கொண்டிருந்த ராகுலுக்கு வென்ட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்கு ராகுல் கோசாலியாவை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்று ராகுலின் பெற்றோர் ராஜஸ்தான் அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் பலனாக ராகுல் கோசாலியா ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் நேற்று முன்தினம் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அழைத்துவரப்பட்டார். ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துமவனையில் ராகுல் கோசாலியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.