குமரியில் காற்றாடி திருவிழா நடத்தப்படுமா? சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
நாகர்கோவில்: குமரியில் ஆண்டு தோறும் காற்றாடி திருவிழா நடத்த வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகிலேயே முக்கடல் சங்கமம் உள்ள 2 இடங்களில் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியும் ஒன்று. அதேபோல் நாட்டிலேயே 2 கடற்கரைகள் கொண்ட ஒரே மாவட்டமும் குமரி தான். ஆண்டிற்கு 2 பருவமழை பொழியும் இங்கு ஐவகை நிலங்களும், 14 வகை வனங்களும் உள்ளன. ஒளவையாருக்கு கோயில் கொண்ட ஒரே மாவட்டமும் கன்னியாகுமரி தான். அகத்தியர், திருவள்ளுவர், விவேகானந்தர், மகாத்மா காந்தி என்று சரித்திர புருஷர்கள் தொடர்புடைய மாவட்டம். இந்து, ெபளத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்று அனைத்து மதங்களின் வரலாற்று தொடர்புடைய வழிபாட்டு தலங்களும், அரண்மனையும் உடைய மாவட்டம். தற்போது வீட்டு மனைகள் காரணமாக தனது இயற்கை எழிலை, இழந்தாலும், இன்னமும் பிரபலம் ஆகாத ஏராளமான பகுதிகள் உள்ளன.இங்கு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் கலாச்சார நடன நிகழ்ச்சிகள் என நடத்தப்பட்டன. சுற்றுலா வார விழா நடத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் பொழுது போக்கு நிகழ்ச்சியாகவும் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு தோறும் புத்தக திருவிழாவும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் பாரா கிளைடிங் கடந்த பல ஆண்டுகள் முன்பு நடத்தப்பட்டது. இதற்கு வரவேற்பு இருந்த நிலையில் மீண்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காற்றாடி திருவிழா இலவச பார்வை அனுமதியுடன் சங்குதுறை கடற்கரையில் 2 நாட்கள் நடத்தப்பட்டன. 100 வகையான பெரியவர்களையும் சிறுவர்களாக ரசிக்க வைக்கும் காற்றாடிகள் கொண்டு வரப்பட்டாலும், அதிக காற்று காரணமாக சுமார் 42 வகை காற்றாடிகள் மட்டுமே பறக்கவிடப்பட்டன. எனினும் இவை காண்போரை மிகவும் மகிழ்வித்தது. ஆண்டு தோறும் இந்த காற்றாடி திருவிழா நடத்தப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏனோ மீண்டும் அவை நடத்தப்படவில்லை. இது பலருக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதற்கிடையே மீண்டும் உள்ளுர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநில சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மீண்டும் காற்றாடி திருவிழா நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பாக உள்ளது.