காசி விஸ்வநாதர் கோயிலில் மொரீஷியஸ் பிரதமர் வழிபாடு
வாரணாசி: மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் காசி விஸ்வநாதர் கோயிலில் தனது மனைவியுடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் கடந்த 9ம் தேதி முதல் இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்று பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக சென்றார்.
அவர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் வழி முழுவதிலும் கடுமையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தனது மனைவியுடன் கோயிலுக்கு சென்ற மொரீஷியஸ் பிரதமரை அங்கிருந்தவர்கள் ஹர ஹர மகாதேவ் என்று கோஷமிட்டு வரவேற்றனர். பின்னர் அவர் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவர் கவுரவிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் தனது மனைவி வீணாவுடன் அயோத்தி சென்றார். அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரை வரவேற்றார். பின்னர் ராமர் கோயிலுக்கு சென்ற ராம்கூலம் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு நடந்து வரும் கோயில் கட்டுமான பணிகளையும் இருவரும் பார்வையிட்டனர். மொரீஷியஸ் பிரதமருடன் 30 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவும் வந்திருந்தனர்.