கரூர் அருகே இளம்பெண்ணை வைத்து விபசார விடுதி நடத்திய பாஜ நிர்வாகி கைது
கரூர்: கரூர் அருகே விபசார விடுதி நடத்திய பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டார். கரூர் தாந்தோணிமலை ஊரணிமேட்டில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கரூர் விபசார தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் 3 பெண் போலீசாருடன் நேற்று முன்தினம் மாலை ஊரணிமேட்டுக்கு சென்று ஒரு வீட்டை கண்காணித்தனர். அப்போது அந்த வீட்டின் முன் நின்று கொண்டிருந்த ஒரு பெண், போலீசை கண்டதும் திடீரென வீட்டுக்குள் ஓடினார்.
இதையடுத்து போலீசார் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது வீட்டுக்குள் ஒரு இளம்பெண் இருந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கரூர் டெக்ஸ்டைல்சில் வேலை பார்ப்பதும், வறுமையில் வாடுவதால் விபசார தொழிலில் இறங்கியதும், எதிர் வீட்டில் வசிக்கும். கரூர் மாவட்ட பாஜ உள்ளாட்சி பிரிவு தலைவரான ரகுபதி(48) இவரை வைத்து விபசாரம் செய்வதும் தெரியவந்தது.
மேலும் பல பெண்கள் இந்த வீட்டுக்கு வந்து விபசாரத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் எதிர் வீட்டில் வசிக்கும் ரகுபதியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் போலீசாரிடம் பிடிபட்ட 2 பெண்களில், ஒரு பெண் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றொரு பெண் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.