கரூர் துயரத்தை கண்டுகொள்ளாத விஜய்யுடன் கைகோர்ப்பேன் என்பதா? திருநாவுக்கரசருக்கு கவிஞர் காசி முத்துமாணிக்கம் கண்டனம்
சென்னை: திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜவின் செல்லப்பிள்ளையான நடிகர் விஜய் உடன் கூட்டணி அமைப்பது பாவமா என திருநாவுக்கரசர் கேட்பது வேதனையாக இருக்கிறது. திமுகவினருக்கும், கர்நாடக மாநிலத்தின் ஆட்சியில் பங்கு கேட்க ஆசை தான். புதுச்சேரியில் காங்கிரசிற்கு 2 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவுக்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அடுத்த முறை திமுக ஆட்சிக்கு தலைமை தாங்க ஆசை தான்.
அதைப் பற்றி பேசினால் தவறில்லை என்று திருநாவுக்கரசர் கூறுவாரா? ஒரே கூட்டத்தை ஊர் ஊராக அழைத்து சென்று. ஒரே இடத்தில் நின்று கலாட்டா செய்வதை தாங்கள் கண்டிக்காதது ஏன்? எனக்கென்ன என்று இல்லாமல், இரவில் ஒரு நிமிடம் கூட தூங்காமல், உயிர்போன 41 பேர் போக, மீதமுள்ள 122 பேர் உயிரைக் காப்பாற்றிய முதல்வரை திருநாவுக்கரசர் பாராட்டவில்லையே ஏன் என மக்கள் கேட்கிறார்கள்.
கரூரில் மட்டும் ஏன் கூட்ட நெருக்கடி என்று சிலர் கேட்கிறார்களே, கரூரில் மட்டும் தான் இரவில் கூட்டம் நடந்தது. விஜய் மாநாடு நடத்திய விக்கிரவாண்டி பொட்டலில் மாலை 6.45 மணிக்கு முடிக்கப்பட்டது. விக்கிரவாண்டி, மதுரை, நாகப்பட்டினத்தில் மரணம் இல்லையா? மரணம் அடைந்தவர்கள் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டாமா? நேரிலாவது சென்று அனுதாபம் கூற வேண்டாமா? விஜய் அல்ல விஜய் கட்சிக்காரன் கூட இல்லை.
அஜித்குமார் மரணத்துக்கு அவரின் குடும்பத்தினரிடம் தமிழக முதல்வர் தொலைபேசியில் மன்னிப்பு கேட்டார். ஆனால் விஜய் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. பனையூரில் அவரது வீட்டிலாவது 41 பேரின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தினாரா?. மருத்துவமனையில் இருப்பவர்களையாவது நான் அப்போலோ போன்ற தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்க்கிறேன் என ஒரு அறிக்கை கூட விடாத விஜய்யை கண்டியுங்கள்.
இவ்வளவு காலமாக விஜய்யை விட்டு அவரது தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் தான் பிரிந்து சென்று விட்டனர் என்று நினைத்தோம். ஆனால் இப்போது தான் தெரிகிறது, இவரே அவர்களை விரட்டி அடித்திருப்பார் போல, மனநோயாளி போன்று காட்சி அளிக்கிறார். நகை கடை திறக்க நயன்தாரா வந்தால் கூட்டம் கூடும். ஆனால் வந்தவர்கள் எல்லாம் நகை வாங்க மாட்டார்கள்.
நடிகரை வேடிக்கை பார்க்கின்ற கூட்டம் எல்லாம் வாக்காக மாறாது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது போன்று கட்டுக்கடங்காத கூட்டம் அன்று கட்டுப்படாத கூட்டம். தன்னை திட்டுவது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பேசும் விஜய்யின் கூட்ட நெரிசல் நெருக்கடியை உடனடியாக தீர்த்து வரும் முதல்வருக்கு நன்றி. அதே நேரத்தில் படத்துக்கு 200 கோடி வாங்குவதை விட்டு விட்டு வந்தேன் எனக் கூறும் நடிகர் விஜய், மரமணடைந்த குடும்பத்துக்கு தலா ஒரு கோடி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.