கரூரில் இன்று திமுக முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்குகிறார்
கரூர்: திமுகவின் முப்பெரும் விழா கரூரில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். திமுக சார்பில் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான முப்பெரும் விழா இன்று (17ம் தேதி) மாலை 5 மணிக்கு கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. இதற்காக, கரூர்-திருச்சி பைபாஸ் சாலை கோடங்கிப்பட்டி அருகே கடந்த 3ம்தேதி பந்தல் கால்கோள் நடும் நிகழ்ச்சி, கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்தது.
தொடர்ந்து, மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. 60 அடி அகலம், 200 அடி நீளம், 50 ஏக்கர் பரப்பளவில் லட்சக்கணக்கில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. முன்னதாக, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், முத்துசாமி, சக்கரபாணி ஆகியோர் பிரமாண்டமான மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டு சென்றனர். இந்நிலையில், இன்று (17ம்தேதி) மாலை திமுகவின் முப்பெரும் விழா பிரமாண்டமாக நடைபெறுகிறது. கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி வரவேற்கிறார். பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். விருது மற்றும் பரிசுகளை வழங்கி மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து உரையாற்றுகிறார்.
முப்பெரும் விழாவில் பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் பேசுகின்றனர். மேலும், முப்பெரும் விழாவில், பெரியார் விருது துணை பொதுச் செயலாளர் கனிமொழிக்கும், அண்ணா விருது முன்னாள் எம்எல்ஏ சீத்தாராமனுக்கும், கலைஞர் விருது முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது தலைமை செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமனுக்கும், பேராசிரியர் விருது சட்டப்பேரவை முன்னாள் கொறடா மருதூர் ராமலிங்கத்துக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கும் வழங்கப்படவுள்ளது. முப்பெரும் விழாவில், லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். கரூர் மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையா தலைமையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
* திருச்சியில் சமூகநீதி நாள் உறுதிமொழி
கரூரில் இன்று மாலை நடக்கும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (17ம்தேதி) காலை 10 மணியளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு காலை 10.45 மணிக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், காலை 11 மணியளவில் திருச்சி கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியை முதல்வர் தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்கிறார்கள்.