கரூரில் கொடுந்துயரத்தில் அரசியல் விளையாட்டை வெளிப்படையாக தொடங்கிவிட்டது பாஜக : திருமாவளவன் விமர்சனம்
சென்னை : கரூரில் கொடுந்துயரத்தில் அரசியல் விளையாட்டை வெளிப்படையாக தொடங்கிவிட்டது பாஜக என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, கரூர் வந்துள்ள நிலையில் திருமாவளவன் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார். மேலும் திருமாவளவன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், "கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை கண்டறியும் குழுவை' அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும். இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கமும் உடனடியாக இதுபோன்ற உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
பாஜக'வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது.
எனவே, திரு.ராகுல் காந்தி அவர்கள், இது தொடர்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு தெரிவித்தார். த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் கடந்த 27-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியானார்கள். இதையடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை நேரில் விசாரிக்க ஹேமமாலினி தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.