கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு சொகுசு காரில் கடத்திச்சென்ற 335 கிலோ குட்கா பறிமுதல்
*நெமிலி அருகே ஒருவர் கைது
நெமிலி : கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு சொகுசு காரில் கடத்திச் சென்ற 335 கிலோ குட்கா பொருட்களை நெமிலி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் குட்கா பொருட்கள் தடை செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து குட்கா பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த காவல் துறையினர் தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களுரூவில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளுக்கு குட்கா பொருட்களை விநியோகம் செய்வதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் துறையினர் ஆங்காங்கே தொடர் சோதனை சாவடிகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நெமிலி காவல் நிலையத்துக்கு உட்பட்ட அரக்கோணம் காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை-காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான பள்ளூர் செக்போஸ்ட் பகுதியில் நேற்று காலை சப்- இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் தனி பிரிவு போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரின் உள்ளே மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாகாராம்(35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் பெங்களுரூவை சேர்ந்த நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்ததும், அங்கிருந்து குட்கா பொருட்களை ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக சென்னைக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து சொகுசு கார் மற்றும் 335 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், சென்னையில் யார் யாருக்கு குட்கா பொருட்கள் விநியோகம் செய்ய கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.