காரைக்கால் மீனவர்கள் 3 பேருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!
காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் 3 பேருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எல்லை பகுதியில் தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களின் படகுகளை சேதப்படுத்துவது, படகுகள் மற்றும் மீனவர்களை சிறைபிடித்து செல்வது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக செப்.28, அக்.9ல் 29 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்நிலையில், காரைக்கால் மீனவர்கள் 29 பேரையும் இன்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 29 மீனவர்களில் 26 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், 3 பேருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு படகு உரிமையாளருக்கு 6 மாத சிறையும் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.