தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதித்தது வருவாய் புலனாய்வுத் துறை
மும்பை: தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு வருவாய் புலனாய்வுத் துறை ரூ.102 கோடி அபராதம் விதித்தது. துபாயில் இருந்து ரன்யா ராவ் 127 கிலோ தங்கம் கடத்தி வந்த வழக்கில் வருவாய் புலனாய்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவுக்கு டி.ஆர்.ஐ. சிறையிலேயே நோட்டீஸ் வழங்கியது.
அபராதத்தை செலுத்தாவிட்டால் நடிகை ரன்யா ராவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என வருவாய் புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ரன்யா ராவின் கூட்டாளியாக செயல்பட்டு 72 கிலோ தங்கம் கடத்திய டி.கே.ராஜுவுக்கு ரூ.62 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கடந்த மார்ச் 4 ஆம் தேதி ரன்யா ராவை கைது செய்திருந்தனர். அப்போது அவரிடம் இருந்து பெருமளவு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டப்படி பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை 6 மாதத்துக்குள் அரசுக்கு மீட்டெடுக்க வேண்டும் என்பதால், விரைவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், ரன்யா ராவ் பெரிய அளவில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டது உறுதியானது.
விசாரணைக்குப் பிறகு நடைபெற்ற அமர்வில், அதிகாரிகள் ரன்யா ராவிடம் ரூ.102.55 கோடி அபராதம் விதித்தனர். இன்று ரன்யா ராவுடன் இணைந்து இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்பதற்கான அதிகாரப்பூர்வ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதம் செலுத்தப்படாவிட்டால், ரன்யா ராவுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நடிகை ரன்யா ராவுடன் சேர்ந்து மேலும் மூவர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2வது குற்றவாளியாக கருதப்படும் தருண் கொண்டூர் ராஜு 67.6 கிலோ தங்கத்தை கடத்தியது உறுதி செய்யப்பட்டதால், ரூ.62 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சஹில் ஜெயின் மற்றும் பரத் ஜெயின் இவர்கள் தலா 63.61 கிலோ தங்கத்தை கடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக இவர்களுக்கு தலா ரூ.53 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மொத்தத்தில் நூற்றுக்கணக்கான கிலோ தங்கத்தை கடத்திய நால்வருக்கும் சேர்த்து சுமார் ரூ.270 கோடிக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2,500 பக்கங்களுக்கு மேற்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றுடன் சேர்த்து அபராத நோட்டீஸ்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்குடன் தொடர்புடைய COFEPOSA மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காவல் அதிகாரிகள், அபராதத்தை விதிப்பதோடு மட்டுமல்லாமல், குற்றவியல் வழக்குகளும் தொடரப்படும் என தெரிவித்துள்ளனர். அதாவது, கடத்தப்பட்ட தங்கத்தை மீட்டெடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளுடன், குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சட்டவிரோத தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கும், மற்ற மூவருக்கும் விதிக்கப்பட்டிருக்கும் இந்த அபராதம், அண்மைக் காலங்களில் விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.