காஞ்சிபுரம் பட்டு பூங்காவில் வேர்களை தேடி திட்டம்: 95 அயலக தமிழ் இளைஞர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வகையில், வேர்களை தேடி திட்டத்தின் கீழ் கலை மற்றும் கலாச்சாரத்தினை அயலக தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையில், 14 நாடுகளை சார்ந்த 95 அயலக தமிழ் இளைஞர்கள், நேற்று முன்தினம் சுற்றுலா பயணமாக காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்கதிர்பூரில் உள்ள அண்ணா கைத்தறி பட்டு பூங்காவினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
இதனைத்தொடர்ந்து, பட்டு கைத்தறி நெசவாளர்களுடன் கலந்துரையாடி, பட்டு சேலைகள் நெசவு செய்யும் முறை குறித்து கேட்டறிந்தார்கள். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாகவும், சுற்றுலாத்துறை சார்பாகவும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இப்பயணத்தில், பங்குபெறும் அயலகத் தமிழ் இளைஞர்கள், அவர்களது நாட்டில் தமிழ்நாட்டின் கலாச்சார தூதுவர்களாக செயல்பட்டு தமிழர்களின் கலாச்சார பெருமைகளை அவர்களது நாடுகளில் பரப்புவர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, சப்-கலெக்டர் ஆஷிக் அலி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பாரதி, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு, அரசு அலுவலர்கள், பட்டு நெசவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.