காஞ்சிபுரம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: 10 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் 10 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் இருக்கக்கூடிய குணகரம்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் ஆறு சென்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலையங்கள் தொடர்ந்து நிரம்பி வருகிறது.
அந்த வகையில் பரந்தூர் சுற்றுவட்டார ஏரியில் இருந்து வெளியேறிவரக்கூடிய உபரி நீர்கள் பேரம்பாக்கம் அருகே உள்ள கூவம் ஆற்றுக்கு இந்த தரைப்பாலத்தை கடந்து செல்கிறது. அங்கு சுற்றியிருக்கக்கூடிய கோட்டூர், எடையார்பாக்கம் என 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் தரைப்பாலத்தை போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் உபரி நீர் அதிகளவில் செல்வதால் குணகரம்பாக்கம் தரைப்பாலத்தில் மேல் 2 அடிக்கு வெள்ளநீர் சென்று வருகிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக கட்சி அளிக்கிறது. ஏற்கனவே இரண்டு தினங்களுக்கு முன்பு இதே இடத்தில் ஒரு சிறுவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில், அப்பகுதி மக்கள் ஆபத்தை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யது வருகின்றனர். இந்த சாலையில் போக்குவரத்து துண்டித்து மேலும் உயிரிழப்பு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் என காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.