கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேச்சு துணை நடிகர் ரவிச்சந்திரனுக்கு முன்ஜாமீன்
சென்னை: சென்னையில் அகரம் அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் சனாதனம் குறித்து கமல்ஹாசன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை நடிகர் ரவிச்சந்திரன் யூடியூப் வலைதளத்தில் கமல்ஹாசன் சங்கை அறுத்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி, எந்த வித உள்நோக்கத்தோடும் அவ்வாறு பேசவில்லை என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டுமென்று வாதிட்டார். காவல்துறை தரப்பில், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளதால் முன் ஜாமீன் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துணை நடிகர் டி.ரவிசந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.