கல்லிடைக்குறிச்சி, புளியங்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
வி.கே.புரம் : நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் 11 முதல் 21 வரையிலான பகுதி மக்களுக்காக நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமிற்கு பேரூராட்சி தலைவர் பார்வதி தலைமை வகித்தார். துணைத்தலைவர் இசக்கி பாண்டியன், செயல் அலுவலர் பாலசுந்தர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வெற்றிச்செல்வி, குடிமைப்பொருள் தாசில்தார் பார்கவி உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, குடியுரிமை பட்டா, சொத்துவரி மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட 13 அரசு துறை சார்ந்த 43 சேவைகளுக்கு பொதுமக்கள் மனுக்களை கொடுத்து பயன்பெற்றனர்.
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது. பயனாளிகள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் சுகாதார அலுவலர் அன்பரசு, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜார்ஜ் ராபர்ட், பாண்டி, ஜானகி, பிரம்மாச்சி, பெரியசெல்வி, மாலதி, மற்றொரு ஜானகி, செய்யது அலி பாத்திமா, முத்துலட்சுமி, அசன் பாத்திமா மற்றும் திமுக நிர்வாகிகள் அனிபா, ராம்குமார், ரசாக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
புளியங்குடி: இதே போல் புளியங்குடி நகராட்சி சார்பில் 27,28, 29 ஆகிய வார்டு மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.புளியங்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இம்முகாமை சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமை வகித்தும் குத்துவிளக்கேற்றியும் துவக்கவைத்தனர்.
நகராட்சி ஆணையாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்வில் தால்தார்கள், மைதீன் பட்டாணி, நாகராஜன், ஆர்ஐ கற்பகராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர், முருகன், மேனேஜர் சந்திரகுமார், நகர அமைப்பு ஆய்வாளர் கஜேந்திரன், பவானி, விஏஓக்கள் உள்ளிட்ட 13 துறை அலுவலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தி.மு.க. நிர்வாகி பத்திரம் சாகுல் ஹமீது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்ற மக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.இதையொட்டி புளியங்குடி நகராட்சி சார்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பையா தலைமையில் நிலைய வீரர்களும், புளியங்குடி எஸ்ஐ முருகன் தலைமையில் போலீசாரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.