கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!!
சென்னை: கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார். துணைவேந்தர் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளை காரணம்காட்டி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியது. கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா கடந்த ஏப்ரல் 28ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
கலைஞர் பெயரில் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு வேந்தராக முதலமைச்சரை நியமிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. 3 மாதங்களுக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது. கலைஞர் பல்கலை. மசோதா நிறைவேற்றப்பட்டு 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஆளுநர் ஜனாதிபதிக்கு மசோதாவை அனுப்பி வைத்துள்ளார். குடியரசு தலைவர் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான முறையீடு செய்வதற்காகவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு குடியரசு தலைவரிடம் கோரிக்கை மனுவை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.