நீதி வழங்குவதில் சிறப்பானவை முதல் 5 இடங்களில் தென் மாநிலங்கள்: தமிழ்நாடு 5வது இடம், உபிக்கு 17வது இடம்
புதுடெல்லி: நீதி வழங்குவதில் சிறந்த மாநிலங்களில் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை, சட்ட உதவிகள் உள்ளிட்டவற்றின் மூலம் மக்களுக்கு நீதி வழங்குவதில் மாநிலங்கள் மதிப்பிடப்பட்டு இந்திய நீதி அறிக்கை 2025 தரநிலை வெளியாகி உள்ளது. இதில், முதல் 6 இடங்களைப் பெற்றுள்ள மாநிலங்கள் சிறப்பானவை என்றும், அடுத்த 6 இடங்களைப் பெற்ற மாநிலங்கள் சுமாரானவை என்றும் கடைசி 6 இடங்களைப் பெற்ற மாநிலங்கள் மோசமானவை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி, நாட்டின் 18 பெரிய மாநிலங்களில் கர்நாடகா, 10-க்கு 6.78 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ஆந்திரா 6.32 புள்ளிகள் பெற்று 2ம் இடத்தையும், தெலங்கானா 6.15 புள்ளிகளுடன் 3ம் இடத்தையும், கேரளா 6.09 புள்ளிகளுடன் 4ம் இடத்தையும், தமிழ்நாடு 5.62 புள்ளிகளுடன் 5ம் இடத்தையும், சட்டீஸ்கர் 5.54 புள்ளிகளுடன் 6ம் இடத்தையும் பிடித்துள்ளன. சுமாரான மாநிலங்களாக மபி 5.42 புள்ளிகளுடன் 7ம் இடத்தையும், ஒடிசா 5.41 புள்ளிகளுடன் 8ம் இடத்தையும், பஞ்சாப் 5.33 புள்ளிகளுடன் 9ம் இடத்தையும், மகாராஷ்டிரா 5.12 புள்ளிகளுடன் 10ம் இடத்தையும், குஜராத் 5.07 புள்ளிகளுடன் 11ம் இடத்தையும், அரியானா 5.02 புள்ளிகளுடன் 12ம் இடத்தையும் பெற்றுள்ளன.
மோசமான மாநிலங்களாக பீகார் 4.88 புள்ளிகளுடன் 13ம் இடத்தையும், ராஜஸ்தான் 4.83 புள்ளிகளுடன் 14ம் இடத்தையும், ஜார்க்கண்ட் 4.78 புள்ளிகளுடன் 15ம் இடத்தையும், உத்தரகாண்ட் 4.41 புள்ளிகளுடன் 16ம் இடத்தையும், உபி 3.92 புள்ளிகளுடன் 17வது இடத்தையும், மேற்கு வங்கம் 3.63 புள்ளிகளுடன் 18வது இடத்தையும் பெற்றுள்ளன. சிறிய மாநிலங்களில் சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மேகாலயா, மிசோரம், கோவா ஆகிய மாநிலங்கள் முறையே ஒன்று முதல் 7 வரையிலான இடங்களைப் பெற்றுள்ளன.