நீதித்துறையில் மதவாத வெறி மேலோங்கி வருவது கவலையளிக்கிறது: வைகோ பேட்டி
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முன்னிட்டு, அதற்கான கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள தாகயத்தில் நேற்று நடைபெற்றது. கொடியை அறிமுகப்படுத்திய வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்னுடைய தலைமையில் ஜன.2 முதல் 12ம்தேதி வரை 11 நாட்கள் 190 கி.மீ. திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடைபயணம் நடக்கிறது. இதற்கான கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக்கு வழங்கி திருச்சியில் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்வில், செல்வப்பெருந்தகை, கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். திருப்பரங்குன்றத்தில் இல்லாத பிரச்னைகளை இந்துத்துவா அமைப்புகள் ஏற்படுத்துகிறது. வடநாட்டில் ராமர் கோயிலை வைத்து பாஜ எப்படி பிரச்னை செய்ததோ, அதேபோல் தமிழ்நாட்டில் சமய மோதலை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றி பெற பார்க்கிறது. மதுரை நீதிபதி இந்துத்துவாதிகளுடன் சேர்ந்து நஞ்சை வெளியே கக்குகிறார். நீதித்துறையில் மதவாத வெறி மேலோங்கி வருவதை கண்டு கவலைப்படுகிறேன்.