வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகளையும், குடும்பத்தினரையும் சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சிக்கிறார்கள்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் வேதனை
சென்னை: தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் மோசமாக விமர்சிக்கப்படுவதாக கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார், இவற்றை புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார். யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் ஆடை வடிவமைப்பாளர் கிறிஸ்டில்லா பதிவிட்ட வீடியோ மற்றும் கருத்துகளை நீக்கக்கோரி சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ஆடை வடிவமைப்பாளர் கிறிஸ்டில்லா, தனக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாக யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், அவரது கருத்துகளை யூடியூப்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாதம்பட்டி ரங்கராஜன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாத் தேவன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி, கடந்த 2013ம் ஆண்டு சமையல் கலை நிபுணர் ரங்கராஜன் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர். தொழிலில் வளர்ச்சியடைந்த நிலையில் ஆடை வடிவமைப்பாளரான கிறிஸ்டில்லாவுடன் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கிறிஸ்டில்லாவுக்கு கோபம் ஏற்பட்டது. இதையடுத்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும், மோசம் செய்து விட்டதாகவும் கிறிஸ்டில்லா பேட்டி கொடுத்ததுடன் காவல்நிலையத்திலும் புகார் அளித்தார். இதனால், சமூகத்தில் ரங்கராஜனுக்கு இருந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. தொழிலில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக தனியாக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்காக நீதிபதிகள் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்படுகின்றனர். அவர்களின் செயல்பாடுகளுக்கு கலர் சாயம் பூசப்படுகிறது. குடும்பத்தினர் பின்புலங்கள் விமர்சிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் அவர்களுக்கு தேவையானதை எழுதுவார்கள். அதை நாம் கவனத்தில் கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும்.
சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வருபவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது இயல்பானது. கிறிஸ்டில்லா குற்றச்சாட்டு குறித்து மாதம்பட்டி ரங்கராஜன் ஆதாரங்களுடன் மறுக்க முடியுமா, அனைத்துக்கும் ஆதாரங்கள் உள்ளதா, தொடர்புக்கான காரணங்களை மறுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி கிறிஸ்டில்லா தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார். சமூக வலைதளங்களில் நீதிபதிகள் குறித்து விமர்சிக்கப்படுவது குறித்து நீதிபதி பேசியதும், மாதம்பட்டி ரங்கராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாத் தேவன் இதுபோன்ற நேரத்தில் வழக்கறிஞர்கள் உங்களுடன் இருப்பார்கள் என்றார். கிறிஸ்டில்லா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞரும் எம்பியுமான சுதாவும் நீதிபதியிடம், அரசியலமைப்புக்கு உட்பட்டு உத்தரவுகளை பிறப்பித்து கடமையாற்றும் நீதிபதிகளுக்கு வழக்கறிஞர்கள் சமூகம் துணை இருக்கும் என்றனர்.