தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதிபதியின் திடீர் உத்தரவை தொடர்ந்து பதற்றம் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு: தடுக்க வந்த போலீசார் மீது இந்து முன்னணி, பாஜ கடும் தாக்குதல்

* நூற்றாண்டு மரபை மீறி மலையின் புது இடத்தில் தீபம் ஏற்ற சென்றபோது மோதல்

Advertisement

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது 100 ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வரும் கார்த்திகை தீபத்தை, புதிய இடத்தில் ஏற்ற நீதிபதி போட்ட திடீர் உத்தரவால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தடையை மீறி மலை ஏறியதை தடுத்ததால் போலீசார் மீது இந்து முன்னணி, பாஜவினர் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீசாருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. தொடர்ந்து, பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமையை பெற்றது மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில். கார்த்திகை மாதம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம். ஆனால், தீபத்தூணில் தீபம் ஏற்றாமல், உச்சி பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபத்தை ஏற்ற முடிவு செய்துள்ளனர். இந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அரசு தரப்பில், ‘‘திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி கோரப்பட்டது. குறிப்பிட்ட இடத்தில் தான் ஏற்ற வேண்டுமென்பதை உரிமையாக கோரியுள்ளனர்’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதி, ‘‘மலை மீது என்றே அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது’’ என்றார். இதற்கு அரசு தரப்பில், ‘உச்சிப்பிள்ளையார் கோயிலும் மலை மீதே உள்ளது’ என தெரிவிக்கப்பட்டது. இடையீட்டு மனுதாரரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தரப்பில், ‘‘உச்சி பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை விளக்கு ஏற்றுவது ஆகம விதிகளுக்கு எதிரானது என எவ்விதமான ஆவணங்களும் இல்லாமல் கூறுவதை ஏற்க இயலாது. திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறைக்கு சொந்தமானது என்பதால், தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை பகுதிக்கு நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இவ்வழக்கில் கடந்த 1ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு காவல்துறை தரப்பில் உரிய அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்று அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று மீண்டும் ராம ரவிக்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது, திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சில் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி, ‘‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மாலை 6 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இல்லாவிட்டால், 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்து விசாரணையை தள்ளி வைத்தார். முன்னதாக திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால் திருப்பரங்குன்றம் கோயில் சுற்றுப்பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

அதே நேரம் பாஜ மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர் ஏராளமானோர் திருப்பரங்குன்றம் கோயிலை சுற்றிலும் குவியத் தொடங்கினர். அவர்கள் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டுமென கோஷமிட்டனர். கோயில் தரப்பில், நூறாண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்படும் நடைமுறைப்படி, உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மாலை 6 மணிக்கு மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மேல் தளத்தில் உள்ள தீப மண்டபத்தில் மூன்றே முக்கால் அடி உயரத்தில் 70 கிலோ எடை கொண்ட தாமிர கொப்பரையில் 400 கிலோ நெய், 250 மீட்டர் நீளமுள்ள காடா துணி, 5 கிலோ சூடம் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் சுற்று வட்டார கிராமங்களில் வீடுகள் தோறும் தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6.10 மணிக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில், ‘‘மோட்ச தீபம் ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தான் தீபம் ஏற்ற அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர். அப்போது நீதிபதி, ‘‘ஏன் நீதிமன்ற தீர்ப்பை அரசுத் தரப்பில் நிறைவேற்றவில்லை?’’ என்றார். இதற்கு அரசுத் தரப்பில், ‘‘வழக்கம் போல் தீபம் ஏற்றும் இடத்திலேயே தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஐகோர்ட் கிளை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டரை அழைத்து, ‘‘இந்த வழக்கின் மனுதாரருடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சென்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். இந்த நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

100 ஆண்டுகள் மரபுப்படி அரசு சார்பில் உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தூணில்தான் தீபம் ஏற்றியதை கண்டித்து, இந்து அமைப்பினர், பாஜவினர் முற்றுகை மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் தடையை மீறி மலை ஏற முயன்றனர். இதனால், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்றப்பட்டது. அப்போது இந்து அமைப்பினர், பாஜவினர் தாக்கியதில் 2 போலீசார் மண்டை உடைந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட மயக்க நிலைக்குச் சென்ற அவர்களை சக போலீசார் மற்றும் அங்கிருந்த மக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். போலீசாரை தாக்கி விட்டு, ‘பாரத் மாதா கீ ஜே’ என கோஷமிட்டவாறு மலை மீது ஏற முயன்ற இந்து அமைப்பினர், பாஜவினரை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

இதற்கிடையே, மனுதாரரான ராம ரவிக்குமார் உள்பட நான்கு பேர் ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோருடன், நேற்று இரவு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மேல ரதவீதியில் உள்ள பழனியாண்டவர் கோயில் அருகே, மலைக்கு செல்லும் பாதைக்கு வந்தனர். அவர்களை, மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். கலெக்டரின் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதைச் சுட்டிக் காட்டி, மலைப்பகுதிக்கு செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் அவர்களுக்குள் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில், மலைக்கு செல்லும் பாதையின் அருகே சூடம் ஏற்றி வழிபட்ட ராம ரவிக்குமார் உள்ளிட்ட நால்வரும், பாதுகாப்பு படையினருடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

தடையுத்தரவை தொடர்ந்து, திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் இருந்து கோயில் மற்றும் மலைப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர், பாஜவினரை கலைந்து செல்லுமாறு போலீசார் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர். ஆனாலும் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை பாதுகாத்திடும் வகையில் மறு உத்தரவு வரும் வரை உடனடியாக 144 தடை உத்தரவை அமல்படுத்தி கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

* தலைமை நீதிபதியிடம் தமிழ்நாடு அரசு முறையீடு இன்று முதல் வழக்காக அவசர விசாரணை

திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பால் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பாக அரசு தரப்பு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்து, உடனடியாக விசாரணை எடுத்துக் கொள்ள வேண்டுமென நேற்றிரவு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா முன் முறையீடு செய்யப்பட்டது. உடனடியாக ஐகோர்ட் கிளையில் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் முறையீடு செய்யுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பில் ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது அரசுத் தரப்பு மேல்முறையீட்டை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினார். இதைத் தொடர்ந்து அரசின் மேல்முறையீட்டு மனு இன்று முதல் வழக்காக விசாரணைக்கு வருகிறது.

* தொடரும் சர்ச்சை

திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கில் நீதிபதிகள் நிஷாபானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை சமீபத்தில் வழங்கினர். இதையடுத்து விசாரித்த மூன்றாவது நீதிபதி விஜயகுமார், ஆடு, கோழி பலியிட தடை விதித்தும், நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பை உறுதி செய்தும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

* ஒரு சார்புள்ள தீர்ப்புகளை வழங்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதியாக தொடரக்கூடாது: பெ.சண்முகம்

புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவரது கருத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து அவருக்கு பாஜ மாநிலத்தலைவர், இந்து மக்கள் கட்சித் தலைவர் உள்ளிட்டோர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். காவல்துறையிலும் புகார் அளித்துள்ளனர். இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம். இத்தகைய மிரட்டல் போக்குகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்பி வெங்கடேசனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த தீர்ப்பு உள்ளிட்ட பல தீர்ப்புகளில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு சார்புள்ள தீர்ப்புகளை வழங்கி வருகிறார். இது நீதித்துறையின் ஒழுங்கிற்கு உள்பட்டதல்ல என்பதால் அவர் நீதிபதியாக தொடரக் கூடாது என வலியுறுத்தி அவர் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் புகார் அளிப்பது என முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News