3000 பணியிடங்கள் விரைவில் நியமனம்: மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் : அமைச்சர் சிவசங்கர் தகவல்
திருவெறும்பூர்: தமிழகம் முழுவதும் மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப) லிட் திருச்சி மண்டலம் மூலம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்கள் பள்ளி நேரங்களில் எளிதாக பயணம் செய்யும் வகையில் திருவெறும்பூர், பாப்பாக்குறிச்சி, தஞ்சை பைபாஸ் சாலை பால்பண்ணையில் இருந்து கட்டணமில்லா புதிய பேருந்து வழித்தட சேவையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் நேற்று துவங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன்கருதி அவரவர் தேவைக்கேற்ப பேருந்து இயக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தனியாக சிறப்பு பேருந்து இயக்க வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, சென்னையில் ஆய்வு கூட்டம் நடத்தி சென்னையில் உள்ள 85 பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் இன்று (நேற்று) விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூரில் நான்கு இடங்களில் இன்று (நேற்று) முதல் இயக்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் எங்கெங்கு பேருந்துகள் கூடுதலாக தேவை என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இயக்கப்படும். போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 3,000 பேர் விரைவில் நிரப்பப்படவுள்ளனர்.மாதம்தோறும் மின் கணக்கீட்டு முறை செயல்படுத்துவதற்கு தற்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணி நிறைவடைந்த பிறகு மின் கணக்கீட்டு முறை நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.